கடிகார கலாட்டா
ஒன்று
இவர்:
ஏங்க, மணி என்னங்க ஆவுது?
அவர்
(சற்றே இழுத்தாற்போல) அஞ்சி… பத்து…
இவர் சீச்சீ…. என்னைய்யா, மணி கேட்டா அஞ்சி பத்துன்னு இழுக்கிறே?
அவர்:
அய்யே, வள்ளல் பரம்பர, மூஞ்சியப் பாரு, மணி அஞ்சி பத்துன்னு சொன்னேன்யா.
இரண்டு:
இவர்: ஏங்க,மணி என்னங்க ஆவுது?
அவர்:
பத்து பத்து.
இவர்:
ஒரு தரம் சொன்னா போதும். நான் ஒன்னும் செவிடு இல்ல.
அவர்:
அட புத்திசாலியே, பத்து மணி பத்து நிமிஷம்னு சொன்னேன்.
மூன்று:
இவர்: ஏங்க,மணி என்னங்க ஆவுது?
அவர்: ஃபோர் ட்வெண்டி
இவர்: ஏய்,மரியாதயா பேசு, யாரப் பாத்து ஃபோர்
ட்வெண்டி எங்கிறே?
அவர்: அய்யா சாமி, மணி நாலு இருபதுனு இங்கிலீஷ்ல
சொன்னேன்.
நான்கு:
(ஒரு பெண் கூடையில் எதையோ எடுத்துக் கொண்டு
வருகிறார். எதிரே மூவர் வருகின்றனர். மூவரும் ஒரே சமயத்தில் அவரிடம் கேள்வி கேட்கின்றனர்)
ஒருவர்: கூடையில் என்ன?
மற்றவர்: மணி என்ன?
மூன்றாமவர்: உன் பேரென்னம்மா?
கூடை வைத்திருப்பவர்: ஆரஞ்சு.
ஒருவர்: என்ன, மூனு பேருக்கும் ஒரே பதில்
சொல்றீங்க?
கூடை வைத்திருப்பவர்: கூடையில் இருப்பது ஆரஞ்சு பழம். மணி ஆறு அஞ்சி ஆவுது.
என் பேரு ஆர். அஞ்சு.அதான் மூனு பேருக்கும் ஒரே பதில் சொன்னேன்.